செவ்வாய், டிசம்பர் 17, 2013

நலமா வாழ யோக முத்திரை

விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்காங்க அவை யோக முத்திரை எனப்படும். ஏன் முத்திரை என்று சொல்லக்கூடாதா என்றால் சதிர் (பரதநாட்டியம்) ஆட்டத்தில் நிறைய முத்திரைகள் உண்டு (மற்ற நாட்டியங்களிலும் முத்திரைகள் உண்டு) அவை நாட்டிய முத்திரைகள், எனவே முத்திரை என்று சொன்னால் நாட்டிய முத்திரை என்று தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவே யோக முத்திரை என்கிறோம். இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். முயன்று பாருங்களேன் காசு செலவு பண்ண தேவையில்லை, ஆனா நேரம் செலவு செய்யனும்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

கை விரல் குறிக்கும் மூலம்
பெரு விரல் சூரியன்
ஆட்காட்டி விரல் காற்று
பாம்பு(நடு) விரல் ஆகாயம் (வானம்)
மோதிர விரல் மண்
சுண்டு விரல் நீர்

நம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்). சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம்? எது குறை? என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா  வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.

அன்றாட வாழ்விலேயே இவற்றை பயன்படுத்துவோம். இப்ப பயன்படுத்துவது குறைந்து விட்டது அல்லது இல்லை எனலாம். ஊர்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்போதும் இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.

  1. நெஞ்சில் கபம் கட்டிக்கிச்சு (நெஞ்சில் சளி கட்டிக்கிச்சு)
  2. பித்தம் தலைக்கு ஏறிடுச்சு (சூடு தலைக்கு ஏறிடுச்சு)
  3. வாதம் அதிகம் இருக்குன்னு நினைக்கிறேன் (மூட்டு வலி, கழுத்து வலி வந்தா இப்படி சொல்வார்கள்)

வானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன.  அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்

முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு

  • விரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள்.
  • விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள்.
  • பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள் (கவனிக்க)
கவனிக்க:
ஒரே ஒரு தளத்தில் மட்டுமே மேற்கண்ட தகவலை பார்த்தேன். வேறு எதிலும் குறிப்பிட்ட மூலத்தை அதிகரிக்க என்ற குறிப்பு இல்லை. இதற்கு காரணம் வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் என்று கருதுகிறேன். சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.

வாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும்  என்று சொல்கிறார்கள். வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் என்கிறார்கள். கபம் தான் கடைசி.

வெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.

சளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.

உணவுகள்:

வாதம்
வாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.

பித்தம்
பித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).
பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்

கபம்
பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.

வாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.

நானும் நிறைய இடத்துல படிச்சேன் எல்லாத்துலயும் வாதம் பித்தம் கபம் அதிகரிச்சா என்ன பண்ணுவது என்று தான் போட்டிருக்கே தவிர இவை குறைஞ்சா என்ன பண்ணுவது என்று போடவில்லை. அதனால இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும் என்று நினைக்கின்றேன். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.

முத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்)  முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..

நமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.

உதவி: கூகுள் ஆராய்ச்சி மூலம் கிடைத்த பல்வேறு இணைய தளங்கள், பதிவுகள், புத்தகங்கள்.

3 கருத்துகள்:

ssk சொன்னது…

சிறப்பாக ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள் .. உங்கள் உழைப்பு பலருக்கும் பயன் தரும்.

ssk சொன்னது…

சிறப்பாக ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள் .. உங்கள் உழைப்பு பலருக்கும் பயன் தரும்.

குறும்பன் சொன்னது…

நன்றி ssk. இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்பது தான் எண்ணம் ஆனால் அதற்கு நிறைய புத்தகங்களை படிக்கவேண்டும். அதை காரணமாக கொண்டு தெரிந்ததை\இருப்பதை மறந்துவிடக்கூடாது என்பதால் எனக்கு தெரிந்ததை எழுதியுள்ளேன்.